8 லட்சம் மனுக்கள் நிலுவை! மாவட்ட நீதிமன்றங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!!
கடந்த 6 மாதங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மனுக்கள் நிலுவையில் இருப்பதாக மாவட்ட நீதிமன்றங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளதைப் பற்றி...
மாவட்ட நீதிமன்றங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 8 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உரிமையியல் வழக்குகளில், குறிப்பாக சொத்து தொடர்பான வழக்குகளில் தமக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு பெற்றவர்கள், அந்த உத்தரவை நிறைவேற்றக் கோரி தாக்கல் செய்யும் மனுக்கள் மீது, அவை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், தமது அதிகார வரம்புக்குள்பட்ட உரிமையியல் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் கடந்தாண்டு மார்ச் 6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்தாண்டு விசாரித்தது.
Advertisement
அப்போது உரிமையியல் விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றக் கோரி, நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 7,95,981-க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த மனுக்களால் மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் நடப்பாண்டு ஏப்.10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள மனுக்களின் நிலவரம் குறித்த முழுமையான விவரங்கள் தொடர்பாக மீண்டும் விசாரிக்கப்பட்டது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடந்த ஓராண்டில் சுமார் 7.7 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களில் மாவட்ட நீதிமன்றங்களில் 4.3 லட்சம் மனுக்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நீதித்துறை மேற்கொண்ட முயற்சிக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஆனாலும், நிலுவையில் உள்ள மனுக்களை முடித்துவைக்க மாவட்ட நீதிமன்றங்களை உயர்நீதிமன்றங்கள் வழிகாட்டுமாறு சுட்டிக்காட்டியதை மேற்கொள்காட்டிய உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அதற்கு இன்னும் விளக்கமளிக்கவில்லை. தங்கள் பதிலைத் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணை அக்டோபர் மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்குள் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.