ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை: குற்றவாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!
ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் குற்றவாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு தில்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியில், இந்திய வருவாய் அதிகாரியின் 22 வயது மளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற சம்பவத்தில் கைதான குற்றவாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவாளி ராகுல் மீனா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் தன்னுடைய குற்றங்களுக்காக வருந்தவில்லை என்றும், விசாரணையின்போது வாக்குமூலத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்வதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தன்னுடைய பேசும்பாணியை அவ்வப்போது மாற்றிக் கொண்டு நீதிபதி முன் பேசியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
Advertisement
நான் குற்றம் செய்துவிட்டேன், தவறுதான் என்று நீதிபதியிடம் குற்றவாளி ராகுல் கூறியதைத் தொடர்ந்து, அவரை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி, குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேட்டதற்கு, இது என்னுடைய வாக்குமூலமாக நான் கருதவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
குற்றம் நடந்த வீட்டில், ராகுல் எட்டு மாதங்கள் வேலை செய்திருக்கிறார், நிதித் தொடர்பாக ஏதோ முறைகேடு செய்ததால் ஒரு மாதத்துக்கு முன்பு அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்கள். இதனால், அந்த வீட்டின் அனைத்து விஷயங்களும் குற்றவாளிக்கு தெரிந்திருக்கிறது, பெற்றோர் வழக்கமாக காலையில் வெளியில் செல்வதும் தெரிந்திருக்கிறது. இதுவே குற்றத்துக்கு அடிப்படையாக மாறிவிட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, ராகுல், ராஜஸ்தானில் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ராகுல் கொள்ளையடித்த பொருள்களும் அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.