FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அதிகரிக்கும் ராகிங் புகார்கள்: முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்!

நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ராகிங் குற்றச்சாட்டுகள் பற்றி...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 9:34 pm IST
ராகிங் - சித்திரிப்பு
பகிர்:

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராகிங் செய்வதற்கு எதிரான தடுப்பு விதிமுறைகள் அமலில் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் இதுதொடர்பான புகார்கள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இதில், உத்தரப் பிரதேசம் அதிக புகார்களுடம் முதலிடத்தில் உள்ளது.

மக்களவையில் ஜூன் 27 அன்று சயானி கோஷ் எம்பி எழுப்பிய கேள்விக்கு கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜும்தார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், இந்தாண்டு ஜூலை 22 வரை நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 521 ராகிங் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில், கடந்த 7 மாதங்களில் 135 புகார்களுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (75), மத்தியப் பிரதேசம் (63), மகாராஷ்டிரா (53) மற்றும் பீகார் (50) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

2022 முதல் 2026 ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 825 புகார்கள் பதிவாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (489), மத்தியப் பிரதேசம் (422), பீகார் (400) மற்றும் மகாராஷ்டிரா (307) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

2024-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 963 ரேக்கிங் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், உத்தரப் பிரதேசம் 251 புகார்களைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பீகார் (122), மத்தியப் பிரதேசம் (117), மேற்கு வங்கம் (102) மற்றும் மகாராஷ்டிரா (89) ஆகிய மாநிலங்கள் உள்ளன. முன்னதாக, 2023-இல் 759 புகார்களும், 2022-இல் 457 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், கடந்த 5 ஆண்டுகளில் ஹரியானா அதிகபட்சமாக 125 புகார்களைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் (87), ஜம்மு-காஷ்மீர் (70), இமாச்சலப் பிரதேசம் (44) மற்றும் சண்டிகர் (4) ஆகியவை உள்ளன.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் இந்தாண்டு ஜனவரியில் ஒரு அரசு கல்லூரி மாணவி ராகிங் சம்பவத்தில் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, மிரட்டல் மற்றும் அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 3 மாணவிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சையின்போது உயிரிழந்தார். இதன் பின்னர், ராகிங் தொடர்பான பிரச்னைகள் மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அதேபோல, கடந்த ஆண்டு ஹரியானாவில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மூத்த மாணவர் ஒருவர் மீது எம்பிபிஎஸ் படிக்கும் ஜூனியர் மாணவர் ஒருவர் அளித்த ராகிங் புகாரின் பேரில் ரேக்கிங் தடுப்புக் குழு விசாரணை நடத்தியது. மேலும், ஹரியானா மாநில மனித உரிமைகள் ஆணையம், ஒரு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ராகிங் சம்பவம் குறித்துத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. ராகிங் செய்ததாக குற்றம் நிரூபணமானால் அது மனித உரிமை மீறலாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதே காலக்கட்டத்தில், ராஜஸ்தானில் 247 புகார்கள் பதிவாகின. அதேபோல, ஒடிசா (227), ஜார்க்கண்ட் (154), டெல்லி (135) மற்றும் உத்தரகண்ட் (142) , ஜார்க்கண்ட் (154), குஜராத் (93) மற்றும் சத்தீஸ்கர் (92) மாநிலங்களிலும் கணிசமான புகார்கள் பதிவாகியுள்ளன.

தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகத்தில் அதிகபட்சமாக 187 புகார்கள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக தமிழ்நாடு (178), ஆந்திரப் பிரதேசம் (133), கேரளம் (126), தெலுங்கானா (101) மற்றும் புதுச்சேரி (7) ஆகியவை உள்ளன.

கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 489 புகார்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து அசாம் (162), திரிபுரா (17), அருணாச்சலப் பிரதேசம் (11), மேகாலயா (9), மிசோரம் (9), மணிப்பூர் (8), சிக்கிம் (6), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (2) மற்றும் நாகாலாந்து (1) ஆகியவை உள்ளன.

கல்வி அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், கட்டாயமான ராகிங் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 18 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 107 உயர்கல்வி நிறுவனங்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு விளக்கம் கோரி கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து ராகிங் தடுப்பு உறுதிமொழிப் பத்திரங்களைப் பெறத் தவறியதுடன், விதிமுறைகளை அமல்படுத்தியதாக அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

”கல்வி நிறுவனங்கள் தங்கள் குறைகளைச் சரிசெய்து, ராகிங் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் மாணவர் நலன் மற்றும் கல்வி வளாகத்தில் பாதுகாப்பைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே உள்ள விதிமுறைகளில், மூன்றாவது திருத்தத்தை 2016 ஆம் ஆண்டில் யுஜிசி அறிமுகப்படுத்தியது. இதில் ராகிங் என்பதற்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் புகார்களைப் பதிவு செய்யவும், அவற்றுக்குத் தீர்வு காணவும் ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் வலுப்படுத்த, உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு இருமுறை யுஜிசி அறுவுறுத்தல்களை வழங்கி வருகின்றது. அதேபோல, உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த யுஜிசி விதிமுறைகள், 2009-ன் கீழ் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில்: வ. ஜெகதீஸ்

summary

Rising ragging complaints: Uttar Pradesh tops the list!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments