கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 அமைச்சர்கள் பதவியேற்பு!
கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது பற்றி...
கர்நாடகத்தில் புதிதாக 20 அமைச்சர்கள் இன்று (ஆகஸ்ட் 3) பதவியேற்றனர்.
கர்நாடகத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்து வந்த சித்தராமையா கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, கடந்த ஜூன் 3 ஆம் தேதி டி.கே. சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், முதல்வர் உள்பட 14 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். இதனால், பல்வேறு முக்கியத் துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Advertisement
Advertisement
இதையடுத்து, கர்நாடக அமைச்சரவையின் விரிவாக்கத்துக்கான பதவியேற்பு விழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார்.
அதன்படி, பெங்களூரில் உள்ள லோக் பவனில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் 20 புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பி.எம். நரேந்திரசுவாமி, சிவராஜ் தங்கடகி, ருத்ரப்பா லமானி, கே.எஸ். பசவந்தப்பா, பி. நாகேந்திரா, டி. ரகுமூர்த்தி, பி. இஸட். ஜமீர் அகமது கான், ரிஸ்வான் அர்ஷத், சந்தோஷ் லாட், மது பங்காரப்பா, புட்டரங்கஷெட்டி, எஸ்.எஸ். மல்லிகார்ஜுன், அஜய் சிங், என். செலுவராய சுவாமி, கே.எம். சிவலிங்கே கௌடா, எச்.சி. பாலகிருஷ்ணா, காயத்ரி சாந்தேகௌடா, பசவராஜ் ராயரெட்டி, விஜயானந்த் காஷப்பனவர் மற்றும் லக்ஷ்மன் சவாடி ஆகிய 20 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதன்முலம், 34 அமைச்சர்களுடன் கர்நாடக அமைச்சரவை முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் விரைவில் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதிய பேரவைத் தலைவராக ஜி.எஸ் பாட்டீலையும், துணைப் பேரவைத் தலைவராக ஏ.எஸ். பொன்னண்ணாவையும் காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Twenty new ministers were sworn in in Karnataka today (August 3).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.