எனக்கு நேரமில்லை... தந்தையின் இறுதிச் சடங்கில் விடியோ அழைப்பில் கலந்துகொண்ட மகள்கள்!
ஹரியாணாவில் இறந்த தந்தையின் இறுதிச் சடங்கில் விடியோ அழைப்பில் கலந்துகொண்ட மகள்கள்...
ஹரியாணாவின் சோனிபட்டில் முதியோர் இல்லத்தில் இறந்தவரின் இறுதிச் சடங்கில் அவரின் மகள்கள் மூவரும் விடியோ அழைப்பு மூலம் கலந்து கொண்டனர்.
ஹரியாணாவில் சிவசரண் ராம் ரத்தன் குப்தா என்பவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார். ஜவுளித் தொழில் செய்து சிவசரண், தன்னுடைய 3 மகள்களையும் படிக்க வைத்து, தற்போது 3 மகள்களும் திருமணமாகி நேபாளம், உத்தர பிரதேசம், மும்பை வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் அவர்களின் தந்தை சிவசரணுக்கு அடிக்கடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசி வந்தனர்.
மகள்களின் கல்விக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்ததாகவும், அவர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்ததாகவும், அவர்களின் சாதனைகளைக் கண்டு பெருமிதம் கொண்டதாகவும் சிவசரண் கூறிவந்ததாக முதியோர் இல்லத்தில் இருந்தோர் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, சிவசரணுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிவசரணை அவரது மகள்கள் தொடர்புகொண்டு பேசுவது குறைந்தது.
இந்த நிலையில்தான், சிவசரண் உடல்நிலை மோசமாகி செவ்வாய்க்கிழமை (ஆக. 4) உயிரிழந்தார். சிவசரண் உயிரிழந்ததாக அவரது மகள்கள் மூவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டபோதிலும், தங்களால் பயணம் செய்ய நேரமில்லை என்றும், இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்து விட்டனர்.
மேலும், இறுதிச் சடங்கை முதியோர் இல்லமே நடத்தட்டும் எனவும் மகள்கள் மூவரும் கூறினர். அவர்களில் ஒருவர், தந்தை சிவசரணின் தகனத்துக்காக ரூ. 5,100 தொகையையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பினார். அதுமட்டுமின்றி, தந்தை தகனம் செய்யப்படுவதை விடியோ அழைப்பில் காண வேண்டும் என்றும் அவர்கள் மூவரும் கூறினர்.
இதனையடுத்து, உள்ளூர் மக்கள் உதவியுடன் சிவசரணின் உடலை முதியோர் இல்ல நிர்வாகம் தகனம் செய்தது. சிவசரணின் தகனத்தை விடியோ அழைப்பில் காட்டியபோது, மகள்களில் ஒருவர் "இது இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும்" என்று கூறுவதும் கேட்கிறது.
இதனைத் தொடர்ந்து, சிவசரணின் அஸ்தியை மகள்கள் கேட்ட நிலையில், பின்னர் இதற்காக ஹரியாணாவுக்கு வர முடியாது என்பதால் அதனை கங்கை நதியில் கரைத்து விடுமாறும் கூறியுள்ளனர். இருப்பினும், சிவசரணின் கண்கள் தானம் செய்யப்பட்டன.
Man dies in old-age home, daughters watch funeral on video call
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.