வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: உயர் நீதிமன்றம் கருத்து
வினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம் என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கசிவு என்பது கொலையை விட மிகக் கொடூர குற்றம் என்று கூறியிருக்கும் உயர் நீதிமன்றம், சத்தீஸ்கர் பொதுப் பணித் துறை ஆணையத்தின் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் பிணை மனுவை நிராகரித்துள்ளது.
சத்தீஸ்கர் பொதுப் பணி ஆணைய (CGPSC) பணியாளர் தேர்வு முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் ஜாமீன் மனுவை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை கசியவிடுவது லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தையே அழித்துவிடுவதால், அது கொலையை விடக் கொடூரமான குற்றம் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
2020-2022 காலகட்டத்தில் நடைபெற்ற பணியாளர் தேர்வு நடைமுறையின்போது சிஜிபிஎஸ்சி-யின் செயலாளராகப் பணியாற்றிய ஜீவன் கிஷோர் துருவ் (62), செப்டம்பர் 2025-ல் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையில், முறைகேடு நடந்த பணியாளர் தேர்வின் மூலம் துணை ஆட்சியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது மகன் சுமித் துருவும் இதில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவுக்கு உடந்தையாகச் செயல்படும் ஒருவர், அத்தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைத்துத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்துடனும் வாழ்வாதாரத்துடனும் விளையாடுகிறார். இத்தகைய செயல் கொலைக் குற்றத்தை விடவும் கொடூரமானது; ஏனெனில், ஒருவரைக் கொல்வதன் மூலம் ஒரு குடும்பம் மட்டுமே பாதிக்கப்படுகிறது, ஆனால் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைப்பதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டு ஜீவன் கிஷோர் துருவ் பிணை மனுவை நிராகரித்துள்ளது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைச் சாதாரணமானவை என்று கூற முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
Question paper leak is a crime far more heinous than murder: High Court observes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.