டெட் தேர்வு கசிவு: ரூ.8,000, நிலத்துக்காக காலணிக்குள் வைத்து வினாத்தாள் கடத்தல்
மகாராஷ்டிரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காலணிக்குள் வைத்து வினாத்தாள் கடத்தப்பட்டது குறித்து...
மகாராஷ்டிரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காலணிக்குள் வைத்து வினாத்தாள் கடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஜூலை 28 ஆம் தேதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET - டெட்) நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராக இருந்தனர்.
இந்த நிலையில், தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்துவிட்டதாக தேர்வுக்கு முந்தைய நாளில் (ஜூன் 27) காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில், பிவண்டி நகர் பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கைப்பற்றப்பட்ட வினாத்தாள்களும் தேர்வுக்கான அசல் வினாத்தாள்களுடன் ஒத்துப்போனது. இதனைத் தொடர்ந்து, டெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனிடையே, வினாத்தாள் கசிவு விவகார வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்த்இல் சுமார் 3,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாணே நகர காவல்துறை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையின்படி 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்களில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவாகியுள்ளனர்.
வினாத்தாள் அச்சிடப்பட்ட ஆக்ரா அச்சகத்தில்தான் இந்தக் கசிவு விவகாரம் நடந்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகையின்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு வந்த ஆக்ராவை சேர்ந்த மஹிம் பத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற அச்சகத்தில் பணியாற்றி வந்த 2 ஊழியர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஊழியரும் சேர்ந்து, தங்களுடைய காலணிகளுக்குள் (ஷூ) காலுக்கு அடியில் வினாத்தாள்களை மறைத்து வைத்து, பாதுகாப்பைக் கடந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 8,000 வழங்கப்பட்டதாகவும், நிலம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்த வினாத்தாள் கசிவுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குப்தா என்பவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், ஒடிஸாவில் நடந்த மற்றொரு வினாத்தாள் கசிவு வழக்கிலும் குப்தாவுக்கு தொடர்பு இருந்துள்ளதையடுத்து, மற்ற வினாத்தாள் கசிவு வழக்குகளிலும் குப்தாவுக்கு தொடர்பு உள்ளதாக என காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
Maharashtra TET leak: Question papers smuggled out in shoe insoles for Rs 8,000
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.