பிகாரில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!
பிகாரில் உள்ள அசோக் தாம் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிகாரில் உள்ள அசோக் தாம் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலியாகினர்.12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் ’இந்திரதாம்நேஷ்வர் மகாதேவ் கோவில்’ அமைந்துள்ளது. அசோக் தாம் பகுதி ரயில் நிலையத்தின் அருகிலுள்ள இக்கோவிலில் சிவபெருமான் முதன்மைக் கடவுளாக உள்ளார். ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையான இன்று புனித நீரை ஊற்றுவதற்காக பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடியிருந்தனர்.
இன்று காலை 6.30 மணியளவில் கோவிலுக்குச் செல்லும் கூட்டம் அதிகரித்துள்ளது. ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்குள் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, பக்தர்கள் கூட்டத்தின்மீது மின் கம்பம் ஒன்று விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பீதியடைந்த மக்கள் பதற்றத்தில் வெவ்வேறு திசைகளில் ஓடத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்து ஒருவர் மீது ஒருவர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதிகாலை 3.30 மணி முதல் கோவிலில் இருந்ததாகக் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர், 6 மணிக்கு மேல் திடீரென பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில், மின் கம்பம் விழுந்து அனைவரும் தடுப்புகளை உடைத்து ஓடியதால் விபத்து ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நெரிசலில் சிக்கி 7 பேர் பலியானதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நெரிசலில் சிக்கி பலியான பக்தர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா ஷீத்லா கோவிலில் மார்ச் 31 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உள்பட 9 பேர் பலியான நிலையில், ஐந்தே மாதங்களில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் அங்கு நடைபெற்றுள்ளது.
7 killed in stampede in Bihar: PM Modi expresses condolences
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.