தமிழகம், கர்நாடகம், ஆந்திரத்தை இணைக்க புல்லட் ரயில்! - முதல்வர் சந்திரபாபு நாயுடு பரிந்துரை!
தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு பரிந்துரை...
தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் பாதை அமைக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரிந்துரைத்துள்ளார்.
சென்னை அருகே கோவளத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று (ஆக. 20) நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில், ஆந்திரத்திலுள்ள தனது குப்பம் தொகுதி வழியாகத் தலைநகர் அமராவதி மற்றும் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு, தமிழகத் தலைநகர் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய புல்லட் ரயில் பாதை அமைக்க வேண்டுமென முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தென்மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனவும், பேரிடர் காலங்களில் மாநிலங்கள் இடையே உதவுவதற்கு பரஸ்பர மீட்புப் படை ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக, கோதாவரி மற்றும் காவிரி ஆறுகளை இணைத்தால் அதன்மூலம் 500 டி.எம்.சி. அளவிலான தண்ணீர் பகிர்மானம் செய்யப்பட முடியும் எனப் பரிந்துரைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு; ஆறுகளின் நீர்பகிர்வு விவகாரத்தில் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தென்மாநில முதல்வர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், கர்நாடகத்தின் மேக்கேதாட்டு திட்டம் மற்றும் கேரளத்தின் முல்லைப் பெரியாற்றின் மீதான புதிய அணைக் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
AP CM Chandrababu Naidu has proposed the construction of a bullet train line connecting Tamil Nadu, Karnataka, and Andhra Pradesh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.