இந்தியா - அமெரிக்க வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!
வணிக ஒப்பந்தம் தொடர்பான இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டறிக்கை இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்...
வணிக ஒப்பந்தம் தொடர்பான இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டறிக்கை இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள குழுவுடன் இறுதிக்கட்ட விவரங்களை சேகரித்து வருவதாகவும், அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டறிக்கை வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (பிப். 2) இரவு ஒப்புதல் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதன்படி, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான 25% வரி, 18 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. இதோடு மட்டுமின்றி ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் விதிக்கப்பட்ட கூடுதலான 25% வரியும் நீக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மை, நிலக்கரி, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா முடிவுசெய்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்க சந்தைக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும், முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வலுவான பொருளாதாரம் அமைய வழிவகை ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி சரண் அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்கா உடனான வணிக ஒப்பந்தத்தால், நாட்டில் எந்தெந்த துறைகள் பலன் பெறும் என்பதைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
''அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வணிக ஒப்பந்தத்தால் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடையும்.
நமது பொறியியல் துறை, குறிப்பாக பொறியியலில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் பலன் பெறும். அதாவது, வாகன உதிரி பாக உற்பத்தி, மின்னணுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் பொறியியல் சார்ந்த கனரக பொருள்களை அமெரிக்காவின் பரந்த சந்தைக்கு கொண்டுசெல்ல முடியும்.
நமது ஜவுளி துறை, வைரம் மற்றும் ரத்திரக் கற்கள், தோல் பொருள்கள் ஏற்றுமதி, கப்பல் துறை சார்ந்த பொருள்கள் என பல்வேறு வாய்ப்புகள் அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் உருவாகியுள்ளன'' எனக் குறிப்பிட்டார்.
India, US likely to issue joint statement on trade agreement this week: Govt sources
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.