பிரதமர் மோடி கோப்புப் படம்
இந்தியா

டிரம்ப்பிடம் முழுமையாக சரணடைந்துவிட்டார் மோடி! காங்கிரஸ்

அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் விமர்சித்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி முழுமையாக சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் தெரிவித்தார். மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா முடிவுசெய்துள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“சரியாக ஓராண்டுக்கு முன்பு, இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவிக்க வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அங்கு, அவர் தனது நெருங்கிய உறவை வெளிப்படுத்தினார். இந்தியா - அமெரிக்க உறவுகள் இதற்கு முன்பு ஒருபோதும் இவ்வளவு பிரகாசமாகத் தோன்றியதில்லை.

அதன்பிறகு உடனடியாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கினர். ஆனால், மே 10, 2025 அன்று மாலை ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்த பிறகு நிலைமை மோசமடையத் தொடங்கியது. அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அன்புடன் வரவேற்று நெருக்கம் காட்டினார். பிரதமர் மோடியின் நெருங்கிய உறவு போலியானது என்பது அம்பலமானது.

தற்போது இந்திய நேரப்படி நள்ளிரவில் மிகத் தாமதமாக இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் வெளியிட்ட தகவல்களிலிருந்து, பிரதமர் மோடி மே 10, 2025 அன்று செய்தது போலவே முழுமையாக சரணடைந்துவிட்டார் என்பது தெளிவாகிறது.

இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்தியுள்ளது.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, அமெரிக்க வேளாண் துறைச் செயலாளர் புரூக் ரோலின்ஸ், அமெரிக்காவிலிருந்து வரும் விவசாய இறக்குமதிகளை இந்தியா தாராளமயமாக்கியுள்ளது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதால் இது அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Modi has completely surrendered to Trump! - Congress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 2

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 1

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி? சு. வெங்கடேசன் கேள்வி

எச்சரிக்கை! தங்கம் வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!!

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

SCROLL FOR NEXT