முகப்பு
இந்தியா

“காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்துவதிலேயே அதிக நேரம் செலவிடுகிறோம்”.. பிரதமர் மோடி!

காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்துவதிலேயே அதிக நேரம் செலவிடுவதாக பிரதமர் மோடி தாக்கிப் பேசியுள்ளதைப் பற்றி...

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 12:48 PM
பிரதமர் மோடி. - பிடிஐ
பகிர்:

திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் தாக்கிப் பேசினார்.

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (பிப்.5) காலை நிறைவேற்றப்பட்டது.

கடும் அமளி

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பிரதமர் மோடியின் பதிலுரை நேற்று ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று காலை நாடாளுமன்றம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது.

அமளிக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவர் ஓம் பிர்லா நிறைவேற்றினார். தொடர்ந்து பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அவர் பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவை எம்பிக்கள் அனைவரும் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி உரை

அவர்களை “அமைதியாக இருங்கள், என்னைப் பேசவிடுங்கள்..” என கோரிக்கை வைத்துவிட்டு பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றுகையில், “பழங்குடியினரின் வேலைகள் மற்றும் நிலங்களை ஆக்கிரமிக்கும் ஊடுருவல்காரர்களை திரிணமூல் காங்கிரஸ் அரசு பாதுகாத்து வருகிறது.

வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவோர் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரிசெய்வதிலேயே நேரம் போய்விடுகிறது; எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியாக வேண்டும்

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தங்கள் கஜானாவை மட்டுமே நிரப்பிக் கொண்டன. ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

வங்கித் துறையில் எதிர்காலம் கருதியே புத்திசாலித்தனமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் வாராக்கடன்கள் அதிகமாக இருந்தன; தற்போது வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன.

வங்கிகளின் வாராக்கடன் 1 சதவிகிதக்கும் கீழ் குறைந்திருக்கிறது. வங்கிகளின் லாபம் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஏழைகளுக்கு ரூ.30 லட்சம் கோடி முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.