2025 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா நாட்டிலிருந்து 3,800-க்கும் அதிகமான இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு தாயகம் வந்தடைந்த இந்தியர்கள் குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய வெளியுறவு இணையமைச்சர் வர்தான் சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
அப்போது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியதற்காக, கடந்த 2025 டிசம்பர் மாதம் வரை 3,800-க்கும் அதிகமான இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டு தாயகம் திரும்பியதாக, அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நாடுகடத்தப்படும் இந்தியர்களை மனிதநேயத்துடன் நடத்த வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கைகள் சங்கிலிகளால் பூட்டப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடன் தாயகம் அனுப்பப்பட்டது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.