சிஜேபி போராட்டம்! நாடாளுமன்றத்துக்குள் புகுந்தால் சுடுவதற்கு தயார்நிலை!
நாடாளுமன்றத்துக்குள் புகுந்தால் போராட்டக்காரர்களை சுடுவதற்கு தயார்நிலை...
நாடாளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தால் அவர்களை சுடுவதற்கு துணை ராணுவப் படையினர் தயார்நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து அமைதிப் பேரணி நடத்த சிஜேபி கட்சி ஆதரவாளர்கள் முயற்சித்தனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, பொதுப் பாதுகாப்பு கருதி தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
தில்லி நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலைகளை தடுப்புகள் மூலம் மூடிய காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர், பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் மீது இன்று காலை தடியடி நடத்தப்பட்டது. சிலரை குண்டுக்கட்டாக காவல்துறையினரும் மத்திய ஆயுதப் படையினரும் கைது செய்தனர்.
தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிஜேபி போராட்டம் தீவிரமடைந்திருக்கும் சூழலில், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசி கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நாடாளுமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் சிறப்பு அதிரடிப் பிரிவும் நவீன ஆயுதங்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவேளை நாடாளுமன்ற கதவுகளை தகர்த்து, போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்தால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அவர்கள் தயார்நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CJP Protest - Readiness to shoot if Parliament is breached!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.