மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவாரா?
மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன?
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு, மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதானை நீக்குவது பற்றி இதுவரை சிந்திக்கக்கூட இல்லை என்று தகவல்கள் வெளியாகின்றன.
நீட் வினாத்தாள் கசிவுக்கு தர்மேந்திர பிரதான் பொறுப்பு அல்ல என்று மத்திய அரசு தீர்க்கமாக நம்புகிறது. எனவே, மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதானை நீக்குவது என்பது சாத்தியமில்லாதது என மூத்த அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் நீட் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, மத்திய அரசு மற்றொரு ஆயுதத்தையும் கையிலெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
அதாவது, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுப்பதற்குக்கூட மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் ஆனால் மத்திய அமைச்சரை பதவியிலிருந்து நீக்க ஒருபோதும் யோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டக் காரர்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த சில நாள்களாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் இடையே கலந்தாலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் நீட் விவகாரம் குறித்து விவாதிக்கலாம். குறைந்த நேரத்தில் விவாதிக்க வேண்டுமா? அதிக நேரத்தில் விவாதிக்க வேண்டுமா? எவ்வளவு நேரம் வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது, எனவே, எதிர்க்கட்சிகள் தங்களது இலக்கை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் நட்டா தெரிவித்திருந்தார்.
நமது நாட்டின் எதிர்காலமே பிள்ளைகள்தான். அவர்களது எதிர்காலத்தைக் காக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் கடமை. இது குறித்து அனைத்து விவரங்களையும் ஆலோசித்து நிலையான கொள்கை வகுப்போம் என்று கூறியிருந்தார்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், போராட்டக்காரக்ளின் அசைக்க முடியாத கோரிக்கையாக தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவால், தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்து ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டத்தை நடத்தி வருகிறது.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணா விரதப் போராட்டம் இருந்த நிலையில், ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி அடக்குமுறை செய்தனர்.
நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வந்தாலும், மத்திய அரசு நீட் தேர்வு குறித்து விவாதிக்கலாம் என்றே கூறி வருகிறது, இதுவரை தர்மேந்திர பிரதான் பதவி குறித்து மௌனம் காத்து வருவது, அதற்கு வாய்ப்பில்லை என்பதையே காட்டுவதாக பிடிஐ செய்தி மூலம் தெரிய வருகிறது.
Will Dharmendra Pradhan be dropped from the Union Cabinet?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.