தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை அமளி தொடரும் என்று கார்கே திட்டவட்டம்...
மத்திய கல்வி அமைச்சர் ராஜிநாமா செய்யும் வரை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு குளறுபடிக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்யக் கோரி தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சிஜேபி இளைஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாகவும், நீட் வினாத்தால் கசிவு தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து 4-வது நாளாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன. விவாதத்துக்கு தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த பிறகே விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றனர்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் கார்கே பேசியதாவது:
”மத்திய அரசு விவாதத்துக்குத் தயாராக இருந்திருந்தால், நாங்கள் முதல் நாள் கோரியபோதே அது தொடங்கியிருக்கும். அப்போது அவர்கள் ஏன் தயாராக இல்லை? மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள், எதிர்க்கட்சி எம்பிக்களான எங்களை உள்ளே செல்லவிடாமல், வழியை மறித்து இன்று போராட்டம் நடத்தினார்கள். இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நிலைமை சரியாகாது. இதுவரை பிரதமர் மெளனம் காப்பது ஏன்? தற்போதைய சூழலை உருவாக்கியதற்கு காரணம் பிரதமர்தான். மாணவர்கள் போராட்டத்தை எதிர்கொள்ளுமாறு ஆளுங்கட்சி எம்பிக்களிடம் பிரதமரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பிரதமரின் நோக்கங்கள் சரியல்ல. பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் ஒருபோதும் பேசியதில்லை.
அவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிறரை அவமதித்தனர். கல்வி அமைச்சர் பதவி விலகிய பிறகே, நாங்கள் எந்தவொரு விவாதத்துக்கும் தயாராவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Parliament will remain stalled until Dharmendra Pradhan resigns - Kharge
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.