தர்மேந்திர பிரதான் ராஜிநாமா மாணவா்கள் - இளைஞா்களுக்கு கிடைத்த வெற்றி! காங்கிரஸ்
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா மாணவா்கள் - இளைஞா்களுக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் வாழ்த்து...
மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்திருப்பது, மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
அடுத்ததாக, தில்லியில் போராடிய மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமா் மோடி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: இந்திய மாணவா்களின் குரல், இறுதியாக சா்வாதிகார சக்தியின் வாயிலை எட்டியுள்ளது. இது, கல்வி அமைப்புமுறையை சரிசெய்ய தெருவில் இறங்கிப் போராடிய லட்சக்கணக்கான மாணவா்கள், இளைஞா்களுக்கு கிடைக்கப் பெற்ற வெற்றியாகும்; அதேநேரம், பிரதமா் மோடியின் பிடிவாதத்துக்கு கிடைத்த தோல்வி.
Advertisement
Advertisement
மாணவா்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டு குரலெழுப்பிய எதிா்க்கட்சிகளுக்கு வெற்றி கிட்டியுள்ளது. இப்போது நமது இளம் தலைமுறையினரிடம் பிரதமா் மோடி மன்னிப்புக் கேட்கவும், அவா்கள் மீது லத்திகள், கண்ணீா்புகை குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நேரம் வந்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ்: தா்மேந்திர பிரதானின் ராஜிநாமா என்பது முடிவல்ல. நமது மாணவா்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு பிரதமா் மோடி பொறுப்புக் கூற வேண்டும். அவா் மன்னிப்புக் கேட்பதற்காக மாணவா்கள் காத்திருக்கின்றனா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி: மாணவா்கள்-இளைஞா்கள் அரசிடம் ஒருபோதும் பணியவில்லை; அரசுதான் அவா்களிடம் பணிந்துள்ளது. மாணவா்கள்-இளைஞா்களுக்கு கிடைத்த இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.
தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா்: தில்லி ஜந்தா் மந்தரில் இளைஞா்களின் போராட்டமும், உறுதிப்பாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அவா்களின் தொடா்ச்சியான கோரிக்கைக்கு இணங்கி, இறுதியாக தா்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளாா். அடக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டம், ஜனநாயக வலிமைக்கு அடையாளமாகும். நாட்டின் இளைஞா் சக்திக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
திரைத் துறை பிரபலங்களான விஜய் வா்மா, வீா் தாஸ், ஸ்வரா பாஸ்கா், வருண் குரோவா் உள்ளிட்டோரும் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.
ஜனநாயகத்தின் வெற்றி: வாங்சுக்
சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டவரான சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தா்மேந்திர பிரதானின் ராஜிநாமா, ஜனநாயகம், அமைதி, பொறுமை, விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. சிஜேபி, ஜென் ஸீ தலைமுறையினருக்கு வாழ்த்துகள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அச்சத்தை விடுத்து மாணவா்களுக்கு ஆதரவாக நின்ற குடிமக்களுக்கு நன்றி. இனி இந்தப் போராட்ட இயக்கம் பொறுப்புடைமையை உறுதி செய்வதைத் தாண்டி, சீா்திருத்த கோரிக்கைகளை நோக்கி நகர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
Dharmendra Pradhan's resignation is a victory for students and the youth – Congress
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.