தட்கல் முன்பதிவில் ஏற்படும் சிக்கல்கள்: கண்டுகொள்ளுமா ரயில்வே?
தட்கல் டிக்கெட் முன்பதிவில் இந்திய ரயில்வே சில மாறுதல்களை அறிவித்து ஓராண்டு கடந்தும் பயணிகள் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.
தட்கல் டிக்கெட் முன்பதிவில் இந்திய ரயில்வே சில மாறுதல்களை அறிவித்து ஓராண்டு கடந்தும் பயணிகள் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.
ஜூலை 2025 முதல், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிந்தது.
கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு கொண்ட டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும் தட்கல் டிக்கெட்டுகளுக்கும், முன்பதிவின் போது பயனரால் வழங்கப்படும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி அங்கீகாரம் தேவைப்படுகிறது.
Advertisement
Advertisement
பயணிகள் முன்பதிவு செய்யும் முக்கியமான நேரத்தில் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் தனியார் முகவர்களைத் தடுக்கும் விதமாக, தட்கல் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்குத் தனியார் முகவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்ற விதி உள்ளது.
இந்திய ரயில்வே அளித்துள்ள தகவலின்படி, ஒரு நாளைக்கு சுமார் 14 லட்சம் பயணிகள் ஆன்லைன் தளங்கள் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். அதில், தட்கல் முன்பதிவுக்கு மட்டுமே காலை 10 மணி முதல் 11 மணி வரை சுமார் நான்கு லட்சம் பயனர்கள் உள்நுழைகின்றனர்.
”பயணச்சீட்டு தேவைக்கும், தற்போது வழங்கப்படும் பயணச்சீட்டு எண்ணிக்கைக்கும் இடையே பெரிய பிரச்னை உள்ளது. அதனால்தான், முன்பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது’ என மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டிஎன்ஐஇ, ரயில் ஒன் செயலி மூலம் கொல்லம் சந்திப்பிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு 12624 என்ற எண் கொண்ட ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றபோது, காலை 11 மணியளவில் அந்த வசதி செயல்படவில்லை.
ஆனால், மற்றொரு தனியார் செயலியில் முன்பதிவு நேரம் தொடங்கிய மூன்று நிமிடங்களில், காலை 11.03 மணிக்கு மூன்றாவது ஏசி படுக்கைகளுக்கு TQWL 17 எனக் காட்டியது. புதிய விதிகளின்படி தனியார் செயலிகள் காலை 11.30 மணிக்கு மட்டுமே முன்பதிவுகளைத் தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ் சமூக வலைதளத்தில் இதுபோன்று டிக்கெட் முன்பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் பற்றி பல பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தட்கல் முன்பதிவு செய்யும் நேரத்தில் ரயில்வேயின் ஐஆர்சிடிசி செயலி சரிவர இயங்காமல் இருப்பதாகவும், அடுத்த 5 நிமிடங்களில் டிக்கெட் முழுவதும் விற்றதாகக் காட்டுவதாகவும் பயனர்கள் புலம்புகின்றனர்.
ரயில் ஆர்வலரான அன்சுமன் சதாபதி கூறுகையில், ”சமீப நாள்களில் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை நேரடியாகத் தேடினால், பெரும்பாலும் எந்தச் சிக்கலும் ஏற்படுவதில்லை. அதில், உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
ஆனால், சாதாரண தட்கல் டிக்கெட் முன்பதிவில் நிலைமை மோசமாக உள்ளது. பயணிகளை அதிக விலை டிக்கெட்டுகளை நோக்கித் தள்ள இது திட்டமிட்டு செய்யப்படுவதாக பலரும் கேல்வி எழுப்புகின்றனர். மேலும், சாதாரண தட்கல் டிக்கெட்டுகள் பெரும்பாலும் தனியார் முகவர்களால்தான் முன்பதிவு செய்யப்படுவதாகப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் சாதாரண டிக்கெட்டுகளை விட 3 மடங்கு அதிக விலை கொண்டவை.
இந்த விவகாரத்தில், டிக்கெட் கவுன்டர்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் சிலர் தனியார் முகவர்களுக்கு முன்பதிவு செய்வதில் உதவுவதாக பயணிகள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
”ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்கையில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. பணம் செலுத்தி முடித்தாலும் செயலி தொடர்ந்து இயங்கி முடிக்க 5 நிமிடங்கள் எடுக்கும். அதற்குள் டிக்கெட்டுகள் விற்றதாகக் கூறி நமக்கு பணம் திருப்பி அனுப்பப்படும். தட்கல் டிக்கெட் பெரும்பாலும் அவசரத் தேவைக்காக எடுக்கப்படுவது. ஆனால், அதில் பணத்தைத் திருப்பி அனுப்ப தனியே நேரம் எடுக்கும்’ என்று தனியார் பயண முகவர் தெரிவித்துள்ளார்.