2029 மக்களவைத் தேர்தல் பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்க வேண்டும்: சிவசேனை
2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி எம்.பி. தெரிவித்தது பற்றி...
2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு குளறுபடி, எஸ்.ஐ.ஆர்., வாக்குத் திருட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒருமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இது குறித்து பேசிய சஞ்சய் ராவத், ”இந்தியா கூட்டணியின் ஒரே நோக்கம், ஊழல்வாதிகளையும் மக்களைச் சுரண்டுபவர்களையும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதாக இருக்க வேண்டும். இதுவே மக்களின் குரலாகவும் விளங்கும்.
2029 மக்களவைத் தேர்தலுக்கான, இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இதுவே எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.