மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!
மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் புதிய அணிக்கு 64 எம்எல்ஏக்கள் ஆதரவளிப்பதாகத் தகவல்...
மேற்கு வங்கத்தில், முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் புதிய அணிக்கு 64 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்து வருகின்றன.
மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 58 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் 19 மக்களவை உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து புதிய அணியை உருவாக்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மமதாவுக்கு எதிரான புதிய அணியின் மூலம் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜி தங்களின் அணிக்குத் தற்போது 64 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, இன்று (ஜூன் 12) செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி மக்களவை உறுப்பினர்கள் தங்களின் பட்டியலை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்ததைபோல, திரிணமூல் சட்டப்பேரவை உறுப்பினர்களும் எங்களின் பட்டியலை சட்டப்பேரவைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
எங்களுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தற்போது 64 ஆக உள்ளது. தேவையானால், அவைத் தலைவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தட்டும். எங்களுடன் எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என நாங்கள் நிரூபிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.