சட்டப்பூர்வ நோட்டீஸ் பற்றி குறிப்பிடாதது ஏன்? - மீனாட்சி நடராஜன்
தேர்தல் ஆணையத்தின் படிவம் 26-ல் சட்டப்பூர்வ நோட்டீஸ் குறித்து பதிவு செய்யும்படி, எந்தத் தகவலும் இடம்பெறவில்லை என்று மீனாட்சி நடராஜன் விளக்கம் அளித்தது பற்றி...
தேர்தல் ஆணையத்தின்ப் படிவம் 26-ல் சட்டப்பூர்வ நோட்டீஸ் குறித்து பதிவு செய்யும்படி, எந்தத் தகவலும் இடம்பெறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற இருந்த மாநிலங்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடவில்லை என்று பாஜக வேட்பாளர் மகேஷ் கேவத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரித்த தேர்தல் ஆணையம் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்தது.
இதனால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மீனாட்சி நடராஜன் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
இந்த விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டிருப்பதால், இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழு விவகாரத்திற்கும் காரணம் படிவம் 26 தான். அதில், நான் சில தகவல்களைப் பதிவு செய்யத் தவறியதாகவும், உண்மைகளை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஏதேனும் குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தாலோ, அல்லது தண்டனைக்குரிய குற்றத்துக்காக ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தாலோ, அது குறித்த தகவல் வழங்கப்பட வேண்டும் என்பதே அந்தப் படிவத்தில் உள்ளது.
எனவே, இவை எல்லாவற்றுக்கும் நான் 'பொருந்தாது' என்று குறிப்பிட்டேன். எனக்கு எதிராக ஒரே ஒரு சட்டப்பூர்வ நோட்டீஸ் மட்டுமே உள்ளது. அந்த நோட்டீஸ் குறித்த முழு சட்ட விவரங்களையும் நான் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த குறிப்பாணையில் சேர்த்திருந்தேன்.
படிவம் 26-ல், தனிப்பட்ட புகார் தொடர்பான தகவலும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட எந்தப் பத்தியும் இடம்பெறவில்லை. அப்படி ஒரு பத்தி இருந்திருந்தால், நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து அந்தத் தகவலை வழங்கியிருப்போம் என்று தெரிவித்தார் மீனாட்சி நடராஜன்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட மூவரும் ஏற்கெனவே, போட்டியின்றித் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.