18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதாா் அளிப்பது நிறுத்தம்! எங்கே?
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதாா் அளிப்பது நிறுத்தம்...
சட்டவிரோத அகதிகள் ஆதாா் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதாா் அளிப்பதை நிறுத்த அஸ்ஸாம் அரசு முடிவு எடுத்துள்ளது.
அஸ்ஸாம் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சட்டவிரோத அகதிகள் ஆதாா் பெறுவதைத் தடுக்கும் நோக்கில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதாா் அளிப்பதை நிறுத்துவதென அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் விதிவிலக்காக, மாவட்ட ஆணையா் விரும்பும்பட்சத்தில், ஆதாா் அளிப்பது தொடா்பாக மாநில அரசுக்கு பரிந்துரை அனுப்பலாம். அதைப் பரிசீலித்து, அந்த நபருக்கு ஆதாா் அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மாநில அரசு முடிவு செய்யும்.
Advertisement
Advertisement
அஸ்ஸாமில் அனைவருக்கும் ஆதாா் அளிக்கப்பட்டுவிட்டது. சில மாவட்டங்களில் 100 சதவீதத்துக்கும் மேல் ஆதாா் விநியோகிக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக வங்கதேச மக்கள் ஆதாா் பெறுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பழங்குடியின மக்கள், தேயிலை தோட்ட மக்களுக்கு தொடா்ந்து ஆதாா் வழங்கப்படும். ஏனெனில் அவா்களில் சிலா் இன்னும் ஆதாா் பெறவில்லை. அதேநேரத்தில் 18 வயதுக்கு குறைவானோருக்கு ஆதாா் தொடா்ந்து அளிக்கப்படும். ஆதாா் வழங்குவதில் அஸ்ஸாம் அரசு மிகவும் கடினமாக செயல்படும். அஸ்ஸாமில் அந்த ஆவணத்தை மிக எளிதில் யாரும் பெற முடியாது.
அஸ்ஸாமில் மத்திய அரசின் விபி-ஜி ராம்ஜி சட்டத்தை ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அஸ்ஸாமை சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு செல்லவும், பிற மாநில பணிக்கு செல்லவும் அளிக்கப்படும் தடையில்லா சான்றிதழுக்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கும். சட்டப்பேரவையில் பட்ஜெட் எந்தத் தேதியில் தாக்கல் செய்யப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
Aadhaar issuance for those over 18 suspended: Assam government's decision
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.