ரயில் கூட்ட நெரிசலில் சிக்கி இளைஞர் பலி: ராகுல் குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு
பிகாரில் ரயில் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்ததாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு
பிகார் பாட்லிபுத்ரா ரயில் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிகாரில் காவலர் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வெழுதுவதற்காகத் தேர்வர்கள் பலரும் ஒரே நேரத்தில் பாட்னா மற்றும் பாட்லிபுத்ரா ரயில் நிலையங்களில் முண்டியடித்துச் சென்றதால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவியது.
இதனிடையே, ரயிலுக்குள் கூட்ட நெரிசலில் சிக்கிய இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்ததாகவும் சமூக ஊடகங்களில் விடியோ வைரலானது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, மத்திய அரசின் மெத்தனப் போக்கால் இளைஞர் ஒருவர் பலியானதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இளைஞர் உயிரிழந்ததாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் விடியோ போலியானது எனவும், பாட்லிபுத்ரா ரயில் நிலையத்தில் இதுபோன்ற சம்பவமேதும் நிகழவில்லை எனவும் மத்திய ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.