வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து...
இராக் கடல்பகுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில், அதில் பணியாற்றி வந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளின் கடல்பகுதியில் பயணிக்கும் அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், இராக் கடல்பகுதியில் கடந்த புதன்கிழமை (மார்ச் 11) பயணித்த அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில், அதில் பணியாற்றிய சஃபேஸா விஷ்ணு எனும் இந்தியர் கொல்லப்பட்டதாக, இராக்கில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.
இத்துடன், அந்தக் கப்பலில் பணியாற்றிய மேலும் 15 இந்திய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.