மணிப்பூரில் இந்திய ராணுவ முகாமின் மீது குகி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!
மணிப்பூரில் குகி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு பற்றி..
மணிப்பூரின் பௌகாக்சாவ் அவாங் லெய்காயில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாமைக் குறிவைத்து குகி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. பௌல்ஜாங் மற்றும் கோத்தோல் பகுதிகளுக்கு அருகே சந்தேகத்திற்குரிய ஆயுதமேந்திய குகி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்தனர்.
மணிப்பூர் காவல்துறை எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட பதிவில்,
2026 மார்ச் 25 அன்று இரவு சுமார் 11.40 மணியளவில் சந்தேகத்திற்குரிய ஆயுதமேந்திய குகி தீவிரவாதிகள் ஃபௌல்ஜாங்/கோத்தோல் பொதுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதல் இந்திய ராணுவ முகாம் நோக்கி நடத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்திற்கு இந்திய ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் 58-வது பட்டாலியன் ஆகியவை தாக்குதல் நடத்திவந்த திசையை நோக்கித் திருப்பிச் சுடுவதன் மூலம் உடனடியாகப் பதிலடி கொடுக்கப்பட்டன. சுமார் 30 நிமிடங்கள் இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இன்று அதிகாலை முதல் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பொதுப் பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளிலும் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப், மணிப்பூர் காவல்துறை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் ஆகியவை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின.
நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மலைப் பகுதியைச் சுற்றிப் பாதுகாப்புப் படைகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக, மணிப்பூரில் உள்ள பாதுகாப்புப் படைகள், பாட்சோய் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் (பம்பே தலைமையிலான பிரிவு) செயல்பாட்டாளரைக் கைது செய்தன. மேலும், இம்பால் மேற்கு மாவட்டத்தில் 6 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.
சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விழிப்புடன் இருந்து வருகின்றனர். அப்பகுதியில் வன்முறை மேலும் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.