ஏறத்தாழ முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நக்ஸல்கள்: அமித் ஷா
நக்ஸல்கள் ஏறத்தாழ முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து...
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் என்னும் நக்ஸல்களின் கோட்டையிலிருந்து ஏறத்தாழ முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்ஸல்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்திருந்தார்.
இதுகுறித்து, மக்களவையில் பேசிய அமித் ஷா, “பஸ்தர் என்னும் நக்ஸல்களின் கோட்டையிலிருந்து ஏறத்தாழ முழுவதுமாக அவர்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் நக்ஸல் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
நக்ஸல் வன்முறையின் காரணமாக 12 கோடி மக்கள் பல ஆண்டுகளாக வறுமையில் வாடியுள்ளனர். 5000 பாதுகாப்புப் படையினர் உள்பட 20,000 பேர் கொல்லப்பட்டனர்.
இறுதியில், இதற்கு யார் பொறுப்பு? நான் கேட்க விரும்புவது என்னவென்றால், 75 ஆண்டுகளில் காங்கிரஸ் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால், இன்னும் பழங்குடியினர் வளர்ச்சி அடையாமல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பழங்குடியினரின் வளர்ச்சியை இப்போது பிரதமர் நரேந்திர மோடிதான் சரிசெய்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் 10,000 நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரண் அடைந்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அன்று அலுவலர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.