பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் அளித்தது யார்? : வினேஷ் போகத் விடியோவில் விளக்கம்
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தது குறித்து வினேஷ் போகத் வெளியிட்ட விடியோ தொடர்பாக...
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் கொடுத்த 6 வீராங்கனைகளில் நானும் ஒருத்தி என மல்யுத்த வீராஙகனை வினேஷ் போகத் இன்று (மே 3) தெரிவித்தார்.
பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ ஒன்றை வினேஷ் போகத் வெளியிட்டுள்ளார்.
அதில், ''பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியே தெரியக் கூடாது என உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர்களின் கண்ணியம் மற்றும் கெளரவம் சார்ந்தத விஷயம் என்பதால் இவ்வாறு தெரிவித்துள்ளது. ஆனால், இன்று சூழ்நிலை காரணமாக நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வழக்கு நிலுவையில் உள்ளபோது எதையும் பேச விரும்பவில்லை. புகார் அளித்த 6 பெண்களில் நானும் ஒருவர். எங்கள் சாட்சியங்கள் இன்னும் தொடர்கின்றன.
Advertisement
Advertisement
நான் அவரது வீட்டிற்கோ அல்லது பயிற்சிக்கோ செல்கிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள். அங்கு எல்லோரும் அவருக்கு நெருக்கமானவர்களாகவே இருப்பார்கள். ஒவ்வொருவரும் அவரை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். நான் போட்டியில் சண்டையிடுவதற்காகவே செல்கிறேன். ஆனால், அங்கு என்னைப்போன்ற விளையாட்டு வீராங்கனைகள் மனதளவில் அழுத்தத்தை சந்திக்க நேரிடுகிறது.
எங்கள் அணி மற்றும் நாடே எங்கள் மீது எதிர்பார்ப்பை வைத்துள்ளது. அப்படிப்பட்ட சூழலில் என்னால் 100% பங்களிப்பை அளிக்க முடியுமா? என்று தெரியவில்லை.
இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஒரு பெண்ணுக்கு மிகவும் கடினமானது. மல்யுத்த கூட்டமைப்பை தானே நடத்துவதாக இன்றும் பிரிஜ் பூஷண் கூறுகிறார். ஒட்டுமொத்த நாட்டின் முன்பும் இதைக் கூறுகிறார்.
விளையாட்டுத் துறை அல்லது அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு ஆதரவானவர்களும் உள்ளனர். யாருக்கேனும் ஏதாவது நேர்ந்தால் அதற்கு அனைத்து அரசாங்கமே பொறுப்பு.
பிரிஜ் பூஷணே, தான் ஒருவரைக் கொன்றுவிட்டதாக விடியோ ஒன்றில் பகிரங்கமாக கூறுகிறார். ஆனால், இதுவரை எந்தவொரு தண்டனையும் அவருக்கு கிடைக்கவில்லை. ஒருவரைக் கொன்றேன் என்பதை வெளிப்படையாகக் கூறும் அவரின் மனநிலை குறித்து சிந்திக்க வேண்டும்.
நான் எனக்கான எந்தவொரு சிறப்பு சலுகைகளையும் பாதுகாப்பினையும் கோரவில்லை. ஒவ்வொரு வீரரின் உழைப்பின் அடிப்படையில் களத்தின் தீர்ப்புகள் இருக்க வேண்டுமே தவிர, குண்டர்களின் முன் முடிவுகளின் அடிப்படையில் அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷண் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 6 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக பிரிஜ் பூஷணுக்கு எதிராக தில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
I myself am one of those six victims who filed a complaint Vinesh Phogat launches fresh attack on former WFI chief Brij Bhushan Sharan Singh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.