நீட் மறுதேர்வு: கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்த அமைச்சர் அறிவுறுத்தல்!
நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தில்லியில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்.
நீட் மறுதேர்வை கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எந்தவித பிழையுமின்றி நடத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (மே 19) உத்தரவிட்டார்.
நீட் மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தில்லியில் உயர்நிலை அதிகாரிகளுடன் அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (மே 19) ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் மறுதேர்வை எந்தவித குற்றச் செயல்களுக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத் தன்மையுடன் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
Advertisement
Advertisement
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்த சாத்தியமான இடங்களை மறுதேர்வுக்கு முன்பு ஆராய்ந்து அதனைக் களைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். குறைகளைக் கண்டறிந்த இடங்களில் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
களத்தில் கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிறுவனங்களிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் என்பதையும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புக்கு (சிபிஐ) மாற்றப்பட்டிருக்கும் நிலையில், வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.