கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக முடிவு! - காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்!
கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சு...
கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், துணை முதல்வரான டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயர்த்தப்படுவார் என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் நிலவி வந்தன.
இதையடுத்து, முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆதரவாளர்கள் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்றதுடன், தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துடன் இருவரும் பலமுறை ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.வி. தேஷ்பாண்டே முதல்வர் சித்தராமையாவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினார். மேலும், கர்நாடகத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய ஆர்.வி. தேஷ்பாண்டே, முதல்வர் சித்தராமையா பதவி விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்
“முதல்வர் சித்தராமையா பதவியில் தொடர வேண்டுமென விரும்பும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதுபற்றி அவரிடம் தெரிவித்தோம். ஆனால், கட்சியின் மேலிடத்துக்கு வாக்கு கொடுத்துவிட்டதாகவும், அதை மதிக்க வேண்டுமெனவும் அவர் எங்களிடம் கூறினார்” என்று ஆர்.வி. தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முதல்வர் சித்தராமையா பதவி விலகுவது குறித்தும், புதிய முதல்வர் யார் என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சியின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.