தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்? வானிலை மையம் விளக்கம்!
தென்மேற்கு பருவமழை பற்றி வானிலை மையத்தின் கணிப்பு...
தென்மேற்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மே மாதம் மூன்றாவது வாரத் தொடக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வழக்கமாக பெய்யும் மழை அளவானது, இந்தாண்டு சராசரியாக 90 சதவிகிதமாக இருக்கக் கூடும்.
இந்த பருவமழைக் காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் இயல்பான மழை அளவைப் பெற வாய்ப்புள்ளது. எஞ்சிய பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழையே பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 13 அன்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சராசரி மழை அளவில், 92 சதவிகிதம் பெய்யக் கூடும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.