‘வந்தே மாதரம்’ ஆர்.எஸ்.எஸ்.ஸின் நிகழ்ச்சி நிரல்! பினராயி விஜயன்
வந்தே மாதரம் முழுமையாக பாடப்படுவது குறித்து பினராயி கருத்து...
வந்தே மாதரத்தின் முழு வடிவமும் பாட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சி நிரல் என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.
கேரள முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது பற்றி முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
”வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டிய அவசியமில்லை என்பது முன்னரே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்கள் மட்டும் பாடப்படும்போது, எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
வந்தே மாதரத்தின் முழு வடிவத்தையும் பாடுவது என்பது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். பதவியேற்பு விழாவின்போது, அப்பாடல் முழுமையாகப் பாடப்பட்டது. அவ்வாறு நடந்திருக்கக் கூடாது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் ஒரு கடுமையான முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதுவே கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிலைப்பாடாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும், மாநில அரசின் கொள்கை விளக்க உரை குறித்து பேசிய அவர், “கேரளம் மீதான மத்திய அரசின் அணுகுமுறை குறித்து எவ்விதக் குறிப்பும் இடம்பெறவில்லை. குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள் பலவும் குறிப்பிடப்படாமலேயே விடப்பட்டுள்ளன.
மத்திய அரசிடமிருந்து கேரளம் கோரிப் பெற வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆனால், அத்தகைய அனைத்து விவகாரங்கள் குறித்தும் மாநில அரசு அமைதியாக இருக்கிறது. இதனால், சட்டபூர்வமாக கிடைக்க வேண்டிய பலவற்றை கேரளம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.