உ.பி., கோவா பேரவைத் தேர்தல்களுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்: வாக்கு இயந்திரங்களில் சோதனை
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட சோதனையை மேற்கொள்ளும் நடவடிக்கையை உத்தர பிரதேசமும் கோவாவும் தொடங்கியுள்ளன.
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட சோதனையை மேற்கொள்ளும் நடவடிக்கையை உத்தர பிரதேசமும் கோவாவும் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு தேர்தலும் நடத்தப்படுவதற்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப ரீதியிலான தவறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம் சரிவர செயல்படுகிறதா என்பதையும் அந்த இயந்திரங்களைத் தயாரிக்கும் பிஇஎல் மற்றும் இசிஐஎல் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் முதற்கட்டமாக சோதித்துப் பார்ப்பது வழக்கம். இந்தச் சோதனைகளில் கோளாறு உள்ள இயந்திரங்கள் பழுதுபார்ப்புக்கு அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்பாக, மாதிரி தேர்தலும் நடத்திக் காட்டப்படும்.
இந்நிலையில், உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 403 உறுப்பினர்களைக் கொண்டுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 22ஆம் தேதியும், 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவை, 40 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கோவா சட்டப் பேரவை, 117 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பஞ்சாப் சட்டப் பேரவை, 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ள உத்தரகண்ட் சட்டப் பேரவை ஆகியவற்றின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பல்வேறு தேதிகளிலும் முடிவடைய உள்ளது. இந்த மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட சோதனையை மேற்கொள்ளும் நடவடிக்கையை உத்தர பிரதேசமும் கோவாவும் தொடங்கியுள்ளன. இந்தச் சோதனையில் சரிவர இயங்குவதாகத் தெரியவரும் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தேர்தல் பணிக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.