வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்தி இந்தியா: பெல்ஜியம் பிரதமர்
உலகளவில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பெல்ஜியம் பிரதமர் பேசியுள்ளது குறித்து...
உலகளவில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் இன்று (செப். 3) தெரிவித்தார்.
பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பார்ட் டி வேவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அவரைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது பார்ட் டி வேவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
மிகவும் அன்பான வரவேற்பு, விருந்தோம்பல் மற்றும் நாம் மேற்கொண்ட மிகவும் வெளிப்படையான இருதரப்புப் பேச்சுவார்த்தை ஆகியவற்றிற்காகப் பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண்ட்வெர்ப் நகரத்தைச் சேர்ந்த ஒரு குடிமகனாக இந்தியாவுக்கு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அதேவேளையில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தரும் முதல் பெல்ஜிய பிரதமராக இங்கு வருவது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
20 ஆண்டுகள் என்பது மிக நீண்ட கால இடைவெளியாகும். அந்த 20 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதார சக்தியாகவும் திகழ்கிறது.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாகவும், பிராந்தியத்தின் எல்லைகளைத் தாண்டி உலக அளவில் வலுவான குரலைக் கொண்ட ஒரு முக்கிய புவிசார் அரசியல் சக்தியாகவும் உருவெடுத்துள்ளது.
பெல்ஜியத்தைப் பொறுத்தவரை, இது இந்தியாவை ஒரு மிக முக்கியமான கூட்டாளியாக மாற்றியுள்ளது. பதிலுக்கு இந்தியாவிற்கு வழங்க எங்களிடமும் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்று நான் நம்புகிறேன்.
அளவின் அடிப்படையில் சற்று சிறிய நாடாக இருந்தாலும், உலகின் மிகவும் திறந்த மற்றும் சர்வதேச அளவில் வலுவான தொடர்புகளைக் கொண்ட பொருளாதாரங்களில் ஒன்றாக நாங்கள் திகழ்கிறோம்.
வர்த்தகம் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான அணுகுமுறை மூலம் நாங்கள் எங்கள் செழிப்பை கட்டமைத்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
India is a rapidly growing economic power: Belgian Prime Minister
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.