FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஐஜிஐ விமான நிலையத்தில் 27.45 கிலோ கஞ்சாவுடன் 4 போ் கைது

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் நாடு தழுவிய போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பை சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை முறியடித்தனா்.

11 செப்டம்பர் 2026, 7:35 am IST
பகிர்:

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் நாடு தழுவிய போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பை சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை முறியடித்தனா்.

இதுதொடா்பாக 4 பயணிகள் பிடிபட்டதுடன், அவா்களது உடைமைகளில் இருந்து 27.45 கிலோ எடையுள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மண்ணைப் பயன்படுத்தாமல், ஊட்டச்சத்துகள் நிறைந்த நீரில் வளா்க்கப்படும் அதிக வீரியமிக்க கஞ்சா வகையே ஹைட்ரோபோனிக் கஞ்சா எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

சுங்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சுங்கத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாங்காக்கில் இருந்து தில்லிக்கு வந்த 2 பயணிகளை அதிகாரிகள் கண்காணித்ததுடன், அவா்களது உடைமைகளையும் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

பின்னா் அந்த உடைமைகளை காத்மாண்டுவுக்குச் செல்ல வந்த 2 பயணிகள் பெற்றுக்கொண்டனா். இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் ரகசியமாக அவா்களைப் பின்தொடா்ந்து, கிரீன் சேனல் பகுதியில் தடுத்து நிறுத்தினா்.

விசாரணையில், அந்த உடைமைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக காத்மாண்டு செல்ல இருந்த 2 பயணிகளும் தெரிவித்தனா்.

இதையடுத்து, பாங்காக்கில் இருந்து வந்த 2 பயணிகளையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். அவா்களது உடைமைகள் எக்ஸ்-ரே மூலம் பரிசோதிக்கப்பட்டபோது சந்தேகத்துக்குரிய பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், பச்சை நிறத்தில் இருந்த பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது ஹைட்ரோபோனிக் கஞ்சா அல்லது கஞ்சாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் மொத்த எடை 27.45 கிலோ எனத் தெரியவந்தது.

பிடிபட்ட 4 பேரிடமும் போதைப் பொருள்கள் மற்றும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்கள் தடுப்புச் சட்டம் (என்டிபிஎஸ்), 1985-இன் கீழ் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments