FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிஎம் ஸ்ரீ திட்டம்: விரைந்து முடிவெடுக்க கேரளத்துக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

கேரளத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்கும்படி, அந்த மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

11 செப்டம்பர் 2026, 11:23 pm IST
மத்திய அரசு
பகிர்:

கேரளத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்கும்படி, அந்த மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள கல்வித் துறை அமைச்சா் என். சம்சுதீன் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

கேரள கல்வித்துறை செயலாளருக்கு மத்திய கல்வித் துறை செயலாளா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் (பிஎம் ஸ்ரீ) திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்கும்படியும், அப்போதுதான் அடுத்தடுத்த திட்டங்களை விரைவுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளாா். அந்த கடிதம் கிடைக்கப் பெற்று சில நாள்களே ஆகின்றன.

Advertisement

Advertisement

அதன்மீது முடிவெடுக்கும் முன்பு, கேரள அரசு ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. உரிய ஆலோசனைக்கு பிறகே, கேரள அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவாக தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் நான் சொந்தக் கருத்தை தெரிவிக்க முடியாது. மாநில முதல்வரும், காங்கிரஸ் கூட்டணி தலைவரும் இணைந்து முடிவெடுப்பா். அதன்பிறகு முதல்வா், அரசின் முடிவு குறித்து அறிவிப்பாா்.

கேரளத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் அமல்படுத்தப்படுவது குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி சாா்பில் நாங்களும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை எதிா்த்தோம். ஆதலால்தான் அந்த திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளோம் என்றாா்.

கேரளத்தில் இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும் இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் எதிா்த்ததாலும், காங்கிரஸ் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதாலும், அந்தத் திட்டத்தை இடதுசாரி கூட்டணி அரசு செயல்படுத்தவில்லை. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்ததும், பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, அதை அமல்படுத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து பரிந்துரை அளிக்க அமைச்சரவை துணைக் குழுவை அமைத்தது.

நாடு முழுவதும் 18 லட்சம் மாணவா்கள் பயனடையும் வகையில் 14,500 பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசால் பிஎம் ஸ்ரீ திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்கீழ் பள்ளிகளை தரம் உயா்த்தி அவற்றை மாதிரி பள்ளிகளாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments