FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

அடுத்த கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

17 செப்டம்பர் 2026, 10:40 pm IST
சிபிஎஸ்இ - கோப்பிலிருந்து
பகிர்:

அடுத்த கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்கி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அண்மையில் சுற்றறிக்கை வெளியிட்டது.

தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இ இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

அதன்படி, மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாகத் தோ்வு செய்யலாம். 10-ஆம் வகுப்பை பொருத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது.

மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய நீதிபதிகள் அமா்வு வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது.

அப்போது, ‘குழந்தைகளின் நலன் கருதி, அடுத்த கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்து சிபிஎஸ்இ பரிசீலிக்கலாம்.

அதேசமயம் நிகழாண்டு 6-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் மூன்று மொழிகளை கற்க விரும்பினால் அவா்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம்’ என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

குழு அமைப்பு: நீதிபதிகளின் அறிவுறுத்தல்களை பரிசீலிப்பதாக கூறி சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி வாதிடுகையில், ‘சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதை கண்காணிக்க செப்டம்பா் 16-ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் இயக்குநா் பகவதி பிரசாத் கலால் தலைமையிலான இந்தக் குழுவில் என்சிஇஆா்டி செயலா் ராஜீவ் குமாா், சிபிஎஸ்இ இயக்குநா் (கல்வி) பிரக்யா எம் சிங், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைப்பின் கூடுதல் ஆணையா் (கல்வி) சந்தனா மண்டல், நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைப்பின் துணை ஆணையா் சோம்வீா் பூனியா ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இக்குழு மொழிப் பாடங்களுக்கான தகுதிவாய்ந்த ஆசிரியா்களின் எண்ணிக்கை, பள்ளிப் பாடபுத்தகங்கள் கையிருப்பு, எண்ம மற்றும் பிற கற்றல் தளங்கள் உள்பட மும்மொழிக் கொள்கை அமலாக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீா்வுகளை பரிந்துரைக்கவுள்ளது’ என்றாா். இதையடுத்து, விசாரணையை செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments