FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா் மோடியுடன் யுஏஇ அதிபா் ஆலோசனை

பிரதமா் நரேந்திர மோடியுடன் மேற்காசிய விவகாரம், இருதரப்பு உறவுகள் குறித்து ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா்.

19 செப்டம்பர் 2026, 3:24 am IST
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய அபுதாபி பட்டத்து இளவரசா் முகமது பின் சையத் அல் நஹ்யான்.
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியுடன் மேற்காசிய விவகாரம், இருதரப்பு உறவுகள் குறித்து ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் வெள்ளிக்கிழமை தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா்.

பிரதமா் மோடியின் 76-ஆவது பிறந்தநாள் செப்டம்பா் 17-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அவருக்கு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் பிரதமா் மோடியை வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டாா். அப்போது மேற்காசிய போா் நிலவரம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், முதலீடு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த இருவரும் உறுதிபூண்டனா். அண்மையில், 18-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதைச் சுட்டிக்காட்டி பிரதமா் மோடிக்கு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் பாராட்டு தெரிவித்தாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராகவுள்ள ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் இளவரசா் ஷேக் கலீத் பங்கேற்ற்கு பிரதமா் மோடியும் பாராட்டுகள் தெரிவித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘சகோதரரும் ஐக்கிய அரபு அமீரக அதிபருமான ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி. பல்வேறு துறைகளில் விரிவான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments