மே.வங்க இடைத்தேர்தலில் தொடர் திருப்பம்! மமதா அணியின் மற்றொரு வேட்பாளரும் வாபஸ்!
மேற்கு வங்கத்தின் ரெஜிநகர் இடைத்தேர்தலில் மமதா அணியின் மற்றொரு வேட்பாளரும் வேட்புமனு வாபஸ்...
மேற்கு வங்கத்தில், முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தரப்பில் ரெஜிநகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூஸ் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சியின் சின்னம் மற்றும் பெயரைத் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மமதா பானர்ஜி பிரிவுக்கு ‘மமதா அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரும், கால்பந்து வீரர் சின்னமும் ஒதுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதையடுத்து, மமதா அணியின் சார்பில் நந்திகிராமில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் சஞ்சிதா பிரதான் டே தனது வேட்புமனுவை நேற்று (செப். 18) திரும்பப் பெற்றார். மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மமதா அணியின் சார்பில் ரெஜிநகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் ரபியுல் ஆலம் சௌதரி தனது வேட்புமனுவை இன்று திரும்ப பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி, ரபியுல் ஆலம் சௌதரி கூறுகையில், தொண்டர்கள் களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும், அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டு பலரும் கைது செய்யப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, நந்திகிராம் தொகுதியில் களமிறங்கிய தனது அணியின் வேட்பாளர் வாபஸ் பெற்றதால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு மமதா பானர்ஜி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் ஆதரவு தெரிவித்த சில மணிநேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நந்திகிராம் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், காலியாகவுள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கு வரும் அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
candidate fielded by Mamata's camp for the by-election in the Rejinagar constituency in WB has withdrawn his nomination.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.