பன்றிக்காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு: சுகாதாரத்துறையினர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே 7 வயது சிறுமி பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை சார்ந்த மருத்துவக்குழுவினர் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சிராயம்பட்டியைச் சேர்ந்த விக்டர்அமல்ராஜ் என்பவரது மகள் ஜனனி(7)கடந்த வாரம் சளி இருமலுடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து திருச்சியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஜனனி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சடலம் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இச்சிறுமியைப் போல அக்கம் பக்கம் இருந்த பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கிராமம் கிராமமாக நேரில் சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாவட்டத்தில் அரிமளம் அரசர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மர்மக் காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அனைவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவ கல்லுhரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர். இதனால் அந்த கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இது குறித்து மாவட்ட மலேரியா அலுவலர் முகமதுயாசிப் கூறுகையில், மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அரிமளம், அரசர்குளம் பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் என்பது தொற்று நோய் என்பதால், அது வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை மருத்துவ குழுவினர் உருவாக்கி வருகின்றனர். மாவட்டத்தில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.