மனசாட்சியை உலுக்கிய புகைப்படக்காரர் டேனிஷ் சித்திகி
இந்தியாவின் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டிய ராய்ட்டர்ஸ் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி ஆப்கனில் தலிபான் தாக்குதலில் பலியானார்.
ஆப்கனில் தலிபான்களின் சண்டையில் சிக்கி உயிரிழந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியப் புகைப்படக்காரரான டேனிஷ் சித்திகி, உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய எண்ணற்ற புகைப்படங்களை எடுத்துப் புகழ்பெற்றவர்.
தில்லி கலவரத்தில் துப்பாக்கியை ஏந்தியவரின் புகைப்படம், கரோனா பொதுமுடக்கதில் புலம்பெயர்ந்தவர்களின் துயரம், தில்லியில் கரோனாவால் பலியானவர்களை மைதானத்தில் எரித்தது என சமீபத்தில் அனைவராலும் பகிரப்பட்ட உலக மக்களின் கவனத்தை ஈர்த்த பல புகைப்படங்களுக்கு சொந்தக்காரர் தான் டேனிஷ் சித்திகி.
மும்பையை சேர்ந்த இவர், ராய்ட்டர்ஸ் பத்திரிகையின் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்கள் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்கச் சென்ற இந்திய குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
Advertisement
ஆப்கன் பாதுகாப்புப் படையினருடன் சென்று கந்தகர் பகுதியில் தலிபான்களால் நடத்தப்படும் தாக்குதல்களை புகைப்படம் எடுத்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்து கொண்டிருந்தார்.
கடைசியாக ஜூலை 13ஆம் தேதி பாதுகாப்புப் படையினருடன் சென்று கொண்டிருந்த போது இவர்கள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலிலிருந்து உயிர் தப்பியதாக கூறி, அந்த காணொலியையும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினருடன் புகைப்படம் எடுக்கச் சென்று கொண்டிருந்த போது தலிபான்களின் தாக்குதலில் சிக்கி பலியானார்.
சித்திகி எடுத்த சில புகைப்படங்கள்:
பத்திரிகை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்காவின் புலிட்சர் விருது 2018ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்: https://www.danishsiddiqui.net/
புகைப்படங்களை எடுத்தவர்: Danish Siddiqui