முகப்பு
சிறப்புச் செய்திகள்

வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பிவீட்டீர்களா? பயம் வேண்டாம்!

யுபிஐ உள்ளிட்ட பல்வேறு செல்லிடப்பேசி செயலிகளும் பணப்பரிமாற்றத்துக்கு உதவுகின்றன. டிஜிட்டல் எனப்படும் எண்ம பணப்பரிமாற்ற செயலிகளின் வளர்ச்சி அபரிமிதமானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:03 AM
வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பிவீட்டீர்களா? பயம் வேண்டாம்!
பகிர்:

யுபிஐ உள்ளிட்ட பல்வேறு செல்லிடப்பேசி செயலிகளும் பணப்பரிமாற்றத்துக்கு உதவுகின்றன. டிஜிட்டல் எனப்படும் எண்ம பணப்பரிமாற்ற செயலிகளின் வளர்ச்சி அபரிமிதமானது.

க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வது அல்லது பயனாளரின் செல்லிடப்பேசி எண் மூலம் அவரது வங்கிக் கணக்குக்கே நேரடியாகச் செலுத்துவது போன்ற எளிய வழிமுறைகள் காரணமாகவே இதனை பல்வேறும் பயன்படுத்தக் காரணம்.

சாலையோரக் கடைகள், வண்டிக்கடைக்காரர்கள் கூட தற்போது யுபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள்.

பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அலைவதால் ஏற்படும் பிரச்னைகள் இதில் இல்லாமல் போய்விட்டன. குறிப்பாக சில்லறை கேட்கும் நிலையே இல்லை எனலாம். துல்லியமாக எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அந்தத் தொகையை ரூபாய்கள் மற்றும் காசுகளாய் அனுப்பும் வசதியும் வந்துவிட்டது.

எனினும், இதில் இருக்கும் ஒரே ஒரு சிக்கல், பணத்தை அனுப்பும் போது தவறுதலாக வேறொருவருக்கு பணம் அனுப்பப்பட்டுவிடுவது மட்டுமே. எவர் ஒருவரும், தவறுதலாக வேறொருவருக்கு பணம் அனுப்பிவிட்டால் பதறித்தான் போய்விடுவார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நிற்பவர்களுக்கு ஆர்பிஐ சொல்வது என்னவென்றால், உரிய நடவடிக்கை எடுத்தால், நிச்சயம் இழந்த பணத்தை திரும்பப் பெற்றுவிடலாம். எனவே பயம் வேண்டாம் என்பதே.

எண்ம பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம், தெரியாமல் வேறொரு நபருக்கு பணத்தை அனுப்பிவிட்டால், உடனடியாகப் பதற்றம் அடையாமல் எந்த செயலி மூலம் பணம் அனுப்பியிருக்கிறோமோ அந்த செயலியில் புகார் அளிக்க வேண்டும்.

பேடிஎம், கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகளின் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்ந்து கொண்டு அவர்களிடம் உதவி கோரலாம்.

ஒருவேளை, எண்ம பணப்பரிமாற்ற செயலிகள் உங்களின் பிரச்னையை தீர்க்க முடியாமல் போனால், ஆர்பிஐயின் எண்ம பணப்பரிவர்த்தனை முறையீட்டு அமைப்பை நாடலாம்.

இது தொடர்பாக ஆர்பிஐ கூறுவது என்னவென்றால், சில சேவைகளில் ஏற்படும் குறைபாடுகள் தொடர்பாக வாடிக்கையாளர் அளிக்கும் புகாரினை ஏற்று அதற்கான தீர்வை வழங்க ஒரு மூத்த அதிகாரியை ஆர்பிஐ நியமித்துள்ளது.

அதாவது, யுபிஐ, பாரத் க்யூஆர் கோடு உள்ளிட்டவற்றின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் போது பணப்பரிமாற்றம் தோல்வியடைந்து, பணத்தை செலுத்தியவரின் கணக்குக்கும் பணம் திரும்ப வராதது போன்ற காரணங்களின் போது பணப்பரிமாற்றம் செய்த செயலியால் அந்த பிரச்னையை தீர்க்க முடியாமல் போனால், அதில் ஆர்பிஐ தலையிடும்.

எனவே, அதே முறையீட்டு மையத்தில், வாடிக்கையாளர்கள், தவறாக வேறொருவருக்கு பணத்தை அனுப்பினால் அந்த பிரச்னைக்கும் முறையிடலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.