அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு!
எருமப்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நாமக்கல்: எருமப்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ்(16), வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். அதே வகுப்பில், செல்லிபாளையத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரது மகனும் படித்து வருகிறார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது, வகுப்பறை வாசலில் விட்டிருந்த ஆகாஷ் காலணியை காணவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ், தனது செருப்பை யார்? மறைத்து வைத்தது என அங்கிருந்த மாணவர்கள் சிலரை திட்டியதாக தெரிகிறது. அதற்கு தொழிலாளியின் மகனான மாணவர் காலணியை நான் தான் வைத்துள்ளேன். எதற்காக திட்டுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில்,ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் சுருண்டு கீழே விழுந்த ஆகாஷ், சிறிது நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், அவரை எழுப்பியபோது, சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார்.
Advertisement
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், உடனடியாக தலைமை ஆசிரியர் புஷ்பராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆகாஷை ஆம்புலன்ஸ் மூலம் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீஸார், மாணவர் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பினர்.
மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, ஆகாஷை தாக்கி கீழே தள்ளிய மாணவர், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆகாஷின் பெற்றோர் கூறுகையில், வலிப்பு வந்து எங்களுடைய மகன் ஆகாஷ் மயங்கி விழுந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து எரும்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சென்றபோது, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரியவந்தது. அங்கு இரவில் சென்று பார்த்தபோது கண்கள் மேலே சொருகிய நிலையில் உயிரிழந்த நிலையில் மகன் கிடந்தான்.
எருமப்பட்டி காவல் நிலையத்தில் மற்றொரு மாணவரை பிடித்து போலீஸார் விசாரிப்பதாக தெரிய வந்துள்ளது. எங்களுடைய மகன் இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றனர்.