FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை பயன்படுத்துகிறதா இஸ்ரேல்? பகீர் குற்றச்சாட்டு!

மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதாக காஸாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது பற்றி..

Updated On : 3 டிசம்பர் 2024, 5:30 pm IST
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்களுக்கு அருகில் அமர்ந்து ஒரு பாலஸ்தீனியப் பெண் தன் குழந்தையின் உடலைப் பார்த்து அழுகிறார். - AP
பகிர்:

காஸா: மனித உடல்களை ஆவியாக்கும் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் காஸா மக்களின் மீது பயன்படுத்துவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காஸாவின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநரான மருத்துவர் முனிர் அல்-புர்ஷ், அல்-ஜசீரா செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்; காஸாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேலிய படைகள் பெயரறியாத ஆயுதங்களை காஸா மக்களின் மீது பயன்படுத்துவதாகவும் அந்த ஆயுதம் ஏவப்பட்டவுடன் அது மனித உடல்களை ஆவியாக்கிவிடுகின்றது எனும் பகீர் தகவலை அவர் தெரிவித்தார். இதனால் காஸாவில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆயுதமானது காஸா நகரத்தின் மீதும் அம்மக்களின் மீதும் வரலாற்றில் இல்லாத அளவில் மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இஸ்ரேல் பயன்படுத்தி வரும் ஆயுதங்கள் குறித்தும் அவை காஸா மக்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சூழ்ந்த கரும்புகை - IANS

பாலஸ்தீன அமைப்பான ஹமாஸும், இஸ்ரேல் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துகின்றதா என்பதை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுக்குறித்து ஹமாஸ் தரப்பு கூறுகையில் “வடக்கு காஸா பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் கூறுவதின் அடிப்படையில் இஸ்ரேலிய ராணுவமானது வடக்கு காஸாவை முழுவதுமாக ஆக்கிரமிக்க அப்பகுதியில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்களை கடந்த 53 நாள்களாக பயன்படுத்தி வருகின்றது” என்று கூறப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள்.

இந்த ஆண்டு துவக்கத்தில், “யூரோ-மெட் ஹியூமன் ரைட்ஸ் மானிட்டர்” எனப்படும் ஐரோப்பாவை சார்ந்த தனியார் மனித உரிமை அமைப்பு, இஸ்ரேல் ராணுவம் தடைசெய்யப்பட்ட வெப்ப மற்றும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் அதனை விசாரிக்க சர்வதேச அளவில் நிபுனர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில் காலம்காலமாக சர்வதேச அளவிலான மனித பாதுகாப்பு சட்டங்களை இஸ்ரேல் மீறுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், மனித உடல்களை உருக்கக்கூடிய அளவில் வெப்பத்தை வெளியேற்றக்கூடிய தடைசெய்யப்பட்ட குண்டுகள் போன்ற ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தியுள்ளதா என்று விரிவான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இஸ்ரேலிய படையால் கொல்லப்பட்ட 1,760 பாலஸ்தீனர்களின் உடல்களை, சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி மிச்சம் எதுவுமின்றி இஸ்ரேல் ராணுவம் ஆவியாக்கிவிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் காஸாவின் பொது பாதுகாப்புத் துறை குற்றம்சாட்டியது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட அல்ஜசீரா பத்திரிகையாளர் சமர் அபுதாகாவின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட படம்

மேலும், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருக்கும் கல்லறைகளிலிருந்து சுமார் 2210 உடல்களை காணவில்லை என்று கூறப்படுகின்றது. இவ்வுடல்கள் யாவும் ஆயுதங்களைக்கொண்டு ஆவியாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள இந்த போரில், 17,000 குழந்தைகள் மற்றும் 11,400 பெண்கள் உள்பட மொத்தம் 44,382 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 190 பத்திரிகையாளர்கள் மற்றும் சுமார் 1000 சுகாதாரப் பணியாளர்களையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments