தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்: சீமான் வாக்குறுதி!
மைக் சின்னத்தில் போட்டியில்லை என்று சீமான் அறிவிப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று (செப். 20) நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 நட்சத்திர உணவகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் விடுதிகளில் சீமை மதுவை விற்க அனுமதிப்போம். தெருக்கு தெரு இருக்கும் மதுக்கடைகளை மூடுவோம்.
மது வாடையே இல்லாமல் நடந்த மாநாடு என்றால் அது நாம் தமிழர் கட்சியின் மாநாடுதான். விஷம் என்று தெரிந்தும் அதை அருந்தக் கூடாது.
அனைவருக்கும் சமமான கல்வி, தண்ணீர் விற்பனைக் கிடையாது, பசுமைப் பொருளாதார போன்றவற்றை முன்னிறுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம். ஜனநாகத்தின் பாதுகாப்பு, கொள்கைதானே தவிர கூட்டணிக் கிடையாது.
2026 சட்டமன்றத் தேர்தலில் எனது எண்ணத்துக்கு ஏற்ற புதிய சின்னத்தில் போட்டியிடுவோம். உறுதியாக மைக் சின்னம் கிடையாது.
தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். திருச்சியை மையப்படுத்தி, அதை நிர்வாக தலைநகராக மாற்ற வேண்டும். இதனை செயல்படுத்த சிறிது காலம் தேவைப்படும் என்று தெரிவித்தார்.