அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர் பலி
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்டது ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சாமிநாதன் (54), இவர் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார். இவரது மனைவி தங்கம் (47). இவர் ராயர்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர். இவர்களுக்கு விஜயலட்சுமி (14), ஆதீஷ்வர்மா (11) இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் தென்கீரனூர் மேம்பாலத்தில் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார்.
Advertisement
தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.