தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்
டிட்வா புயல் நெருங்கி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரியின் ஒருசில இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து..
டிட்வா புயல் நெருங்கி வருவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவ. 29) எச்சரித்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி - காரைக்காலின் ஒருசில பகுதிகளிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், குறிப்பாக தூத்துக்குடி கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அசாதாணமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்கரைக்குச் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
''வடக்கு-வடமேற்கு திசையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் டிட்வா புயல், வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரத்தை நாளை (நவ. 30) சென்றடையும். ஞாயிறு மாலை 25 கி.மீ. வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 6,000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 28 குழுக்கள் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | டிட்வா புயல்: விமானம், கப்பல் மூலம் இலங்கைக்கு உதவும் இந்தியா!
Cyclone Ditwah IMD issues red warning in parts of TN, Puducherry
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.