வெள்ளியங்கிரியில் மலை ஏறிய கல்லூரி மாணவர் மயங்கிவிழுந்து பலி!
கோவையில் வெள்ளியங்கிரி மலை எறிய இளைஞர் மயங்கிவிழுந்து பலியான சம்பவம் குறித்து...
கோவையில் வெள்ளியங்கிரி மலை எறிய தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மயங்கிவிழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென் கைலாயம் எனப் பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு ஏழு மலையலைக் கடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்காக வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், பீடம்நேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார் (23), கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் பார்மஸி ஐந்தாம் ஆண்டு பயின்று வந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பயின்று வந்தவர், தனது நண்பர்களுடன் வியாழக்கிழமை இரவு சுமார் பத்து மணிக்கு வெள்ளிங்கிரிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து சிவன் கோயிலுக்கு செல்வதற்காக அபி மற்றும் மகேந்திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் 5 ஆவது மலையில் ஏறியுள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சு வலியால் துடித்தவர் கண் இமைக்கும் நேரத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடன் இருந்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத சூழலில், அவர் அங்கேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோயில் நிர்வாகம் மற்றும் டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள், கடும் சிரமத்திற்கு இடையே முகேஷ் குமாரை அடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து முகேஷ் குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயர சம்பவம் மலையேற்றப் பிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.