ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர்! 67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை!!
67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜம்மு-காஷ்மீர் அணி முன்னேறியுள்ளதைப் பற்றி...
67 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு ஜம்மு-காஷ்மீர் அணி முன்னேறியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கல்யாணியில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின. கடந்த பிப். 15 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியின் கேப்டன் பராஸ் டோக்ரா முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார்.
பெங்கால் முதல் இன்னிங்ஸ்- 328/10
Advertisement
Advertisement
அதன்படி, முதலில் ஆடிய பெங்கால் அணி தனது முதல் இன்னிங்ஸில் 97.1 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதீப் குமார் கராமி 146 ரன்கள் குவித்தார். ஜம்மு-காஷ்மீர் அணித் தரப்பில் அக்யூப் நபி தார் அட்டகாசமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
ஜம்மு-காஷ்மீர் முதல் இன்னிங்ஸ்- 302/10
பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி 76.1 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக அப்துல் சமத் 82 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி வீரர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆச்சரியப்படுத்தினார்.
பெங்கால் 2-வது இன்னிங்ஸ்- 99/10
அதைத் தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடங்கிய பெங்கால் அணி 25.1 ஓவர்களில் வெறும் 99 ரன்களுக்கு ஜம்மு-காஷ்மீரிடம் சரணடைந்தது. நபி தார், சுனில் குமார் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்ஸ்-126/6
பின்னர், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
அதிகபட்சமாக வன்ஷ்ராஜ் சர்மா 43 ரன்களும், அப்துல் சமத் 30 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் ஜம்மு-காஷ்மீர் அணி அறிமுகமாகி 67 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை எடுத்த ஜம்மு-காஷ்மீர் வீரர் அக்யூப் நபி தார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முதல்முறையாக ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஜம்மு-காஷ்மீர் அணிக்கு மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Jammu and Kashmir scripted history by reaching the Ranji Trophy finals for the first time in their 67-year history, defeating two-time former champions Bengal by six wickets on day four of the semifinal here on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.