நாட்டையும் அரசியலமைப்பையும் அவமதித்த திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
திரிணமூல் காங்கிரஸ் அரசு நாட்டையும் அரசியலமைப்பையும் அவமதித்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்தது குறித்து...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரசு குடியரசுத் தலைரை மட்டுமல்ல; நாட்டையும் அரசியலமைப்பையும் அவமதித்துள்ளதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்திற்கு ஒரு நாள் முன்பே மேற்கு வங்கத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அரசு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைக் கடுமையாக அவமதித்துள்ளது. இந்த அவமதிப்பை நாடும், பெண் சக்திகளும் ஒருபோதும் மறக்காது எனக் கடுமையாகச் சாடியுள்ளார் பிரதமர் மோடி.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்களுக்கானச் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை (மார்ச் 7) கலந்துகொண்டார்.
ஆனால், அந்த நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிட்ட பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், இடம் மாறியதால் பெரிதாகக் கூட்டம் கூடவில்லை என்று சொல்லப்படுகின்றது.
இதனிடையே, குடியரசுத் தலைவரின் வருகையின்போது, அவரை வரவேற்க மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜியோ அல்லது அவர் சார்பில் எந்தவொரு அமைச்சரோ செல்லவில்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.