தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்க தீர்மானம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது குறித்து...
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
அண்மைக்காலமாகவே, தலைமைத் தேர்தல் ஆணையர் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டி, எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர்.
சட்டப்படி, குறைந்தபட்சமாக மக்களவையில் 100 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் 50 எம்பிக்களும் தீர்மானத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே அந்தத் தீர்மானத்தை முன்மொழிய முடியும்.
இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் மீதான பதவி நீக்க தீர்மானத்தில் மக்களவையின் 130 எம்.பி.க்கள், மாநிலங்களவையின் 63 எம்.பி.க்கள் என மொத்தம் 193 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீர்மானத்தில் இந்தியா கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டதாகவும், இந்தியா கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சி எம்பிக்களும் சில சுயேச்சை எம்.பி.க்களும் இதில் ஆர்வத்துடன் பங்கெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றால், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது வரலாற்றில் இதுவே முதல்முறையாக இருக்கும்.
அலுவலக விவகாரங்களில் பாகுபாடு காட்டுதல், தேர்தல் மோசடி தொடர்பான விசாரணைகளை தடுப்பது, பெருமளவில் தகுதியுள்ளவர்களின் வாக்குரிமையை பறிப்பது போன்ற 7 காரணங்கள் ஞானேஷ்குமாரை, தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நீக்குவதற்கானவை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.